rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

10/30/07

உலகின் நம்பர்-1 பணக்காரர்


சென்செக்ஸ் குறியீடு 20,000 புள்ளிகளை எட்டியதைத் தொடர்ந்து, உலகின் நம்பர்-1 பணக்காரர் என்ற பெருமையை முகேஷ் அம்பானி பெற்றுள்ளார்.

யூடிவியின் புதிய சேனலில் உலக திரைப்படங்கள்

தொலைக்காட்சி மற்றும் சினிமா பொருளடக்க தயாரிப்பு நிறுவனமான யூடிவி சாஃப்ட்வேர் நிறுவனத்தின் துணை நிறுவனமான வி அன்ட் எஸ் புராட்காஸ்டிங் வரும் டிசம்பர் மாதத்தில் உலக சினிமாக்களுக்கான தொலைக்காட்சி சேனல் ஒன்றை துவக்குகிறது.
அண்மையில் வி அன்ட் எஸ் நிறுவனம் இளைஞர்களுக்கான பிந்தாஸ் மற்றும் பிந்தாஸ் மூவீஸ் என்ற இரண்டு சேனல்களை அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
24 மணி நேர சேனலான இது, உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் சிறந்த படங்களை நமக்கு வழங்கவுள்ளது. இந்த படங்கள் ஒளிபரப்பப்படும் போது, அவற்றின் மொழிபெயர்ப்புக்குரிய ஆங்கில துணைத் தலைப்புகளும் வந்தபடியிருக்கும்.
தற்போது நமக்கு ஸ்டார் மூவீஸ், ஸீ கஃபே, ஏ.எக்ஸ்.என். மற்றும் ஹெச்.பி.ஓ ஆகிய பிரபல சேனல்கள் கிடைக்கின்றன. இந்த சேனல்கள் ஆண்டொன்றிற்கு ரூ.170- 180 கோடி விளம்பர வருவாய் ஈட்டி வருகின்றன.
இந்த சேனல் அறிமுகத்தின் தேவை குறித்து பேசிய வி அன்ட் எஸ் நிறுவன தலைமை அதிகாரி ஷாந்தனு ஆதித்யா, 20 மில்லியன் கேபிள் இணைப்புகளுக்கு உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களை வழங்கும் நோக்கத்துடன் இது துவங்கப்படுகிறது என்றார்.
இதுவரை உள்ள ஸ்டார் மூவீஸ் மற்றும் ஹெச்.பி.ஓ உள்ளிட்ட சேனல்களில் வெகு ஜன திரைப்படங்கள் ஒளிபரப்பபடுகின்றன. ஆனால் சிறந்த உலக சினிமாவுக்கென்று தனிப்பட்ட சேனல்கள் இல்லையென்பதால் ஒரு குறிப்பிட்ட உயர்மட்ட, மத்தியதர, உயர் மத்தியதர வகுப்பினரிடையே இந்த சேனல் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.இப்படங்களை தற்போது விசிடி லைப்ரரி அல்லது டிவிடி லைப்ரரிகளிலிருந்து எடுத்து பார்க்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. இது மிகவும் சிக்கனமானது. எனினும் நமக்கு பிடித்த திரைப்படங்கள் தவிர, வேறு சிறந்த படங்கள் என்னவென்று தெரியாத நேயர்களுக்கு சேனலே தேர்ந்தெடுத்து காண்பிப்பதால் இதற்கு வரவேற்பு அதிகரிக்கும். உதாரணமாக லத்தீன் அமெரிக்க நாட்டு கலைப்படங்கள் அவ்வளவாக இந்தியாவில் கிடைப்பதில்லை. அதுபோன்ற அரிதான உலக திரைப்படங்கள் நம் வீட்டிற்கு வருவது என்பது வரவேற்கத்தக்கதே என்று நேயர்கள் கருதக்கூடும். எனினும் இந்த சேனல் மக்களிடையே எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய ஒரு மாதம் தேவைப்படும் என்று தொலைக்காட்சி விளம்பர நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. கட்டணச் சேனலான இது டிஷ் டிவி மற்றும் டாடா ஸ்கை போன்ற டீ.டி.எச் சேவைகளுக்கும் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் வரும் மார்ச் மாதத்தில் வி அன்ட் எஸ் புராட்காஸ்டிங் ஹிந்தி திரைப்பட சேனல், ஆங்கில வணிக செய்திகள் சேனல் மற்றும் ஹிந்தி பல்சுவை பொழுதுபோக்கு சேனல் ஒன்றையும் துவங்குகிறது.

9/25/07

வைரஸ் தடுப்பு மென்பொருளுக்கு எதிர்காலம் உள்ளதா?

கணினிகளை வைரஸ் தாக்காமல் இருக்க வைரஸ் எதிர்ப்பு அல்லது வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்கள் தினம் ஒன்று என்ற வீதத்தில் வைரசை விடவும் அதிகமாக பெருகி வருகிறது. ஆனால் வைரஸ் பரவல் கணிசமாக அதிகரித்திருக்கிறதே தவிர இந்த சாப்ட்வேர்களின் வருகையால் குறையவில்லை என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த 10- 15 ஆண்டுகளாக நம் கணினியில் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்கள் இருக்க வேண்டியதன் அவசியத்தை கணினி தயாரிப்பாளர்கள் அறிவுறுத்திய வண்ணம் உள்ளனர். ஆனால் வைரஸ்களோ நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக பல்கி பெருகி கணினிகளை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்கள் போதுமானதாக இருக்குமா, இதற்கு எதிர்காலம் இருக்கிறதா என்ற கேள்வி நிபுணர்கள் மட்டத்தில் எழுந்துள்ளது.
வைரஸ் தடுப்பு புரோகிராம்களின் கண்ணில் மண்ணைத் தூவி கணினிகளில் தற்பொது பொருத்தப்படும் நவீன புரோசசர்களை பயன்படுத்தியே நமது கணிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடும் அதி பயங்கர வைரஸ்கள் தற்போது உலா வரத் துவங்கியுள்ளன.
ஆனால் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர் தயாரிப்பாளர்களோ இது ஒரு பிரச்சனையல்ல என்கின்றனர். கணினி பாதுகாப்பு முன்னணி நிறுவனமான சைமன்டெக் நிறுவனத்தின் ஆய்வுப்பிரிவு மேலாளர் எரிக் சென் இது பற்றி கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும், வைரஸ் எதிர்ப்பு சாப்ட்வேர்கள் செத்து விட்டன என்ற பேச்சு எழுந்துகொண்டு தான் இருக்கிறது" என்றார்.
சைமன்டெக் நிறுவனத்திற்கு போட்டி நிறுவனமான சோஃபோஸ் நிறுவனத்தின் தொழில் நுட்ப பிரிவு ஆலோசகர் கிராகாம் க்ளூலே இது குறித்து மாற்றுக் கருத்தை வைத்திருக்கிறார்.
கணினிகளை அச்சுறுத்தும் புதுபுது வைரஸ்கள் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த வைரஸ் புரோகிராம்கள் ஒரு கணினியை அடையும் விதம் மிகவும் பழைய முறையாகவே இன்னமும் உள்ளது. இதனால் அதனை கண்டுபிடித்து அழித்து விட முடிகிறது என்கிறார்.
தற்போது உள்ள வைரஸ் எதிர்ப்பு சாப்ட்வேர்கள் அதே பெயரில் இருக்கலாம் ஆனால் அது 20 ஆண்டுகளுக்கு முன்பு செய்த வேலையை செய்வதில்லை. வைரஸ் அடையாளங்களின் (Virus Signatures) சுவடை தற்போது உள்ள வைரஸ் எதிர்ப்பு சாப்ட்வேர்கள் நம்பியிருக்கவில்லை. அதாவது எந்த ஒரு வைரஸிலும் அதற்கென்றே பிரத்யேகமான அடையாளம் ஒன்று இருக்கும். அதனை கண்டுபிடித்து அழிக்கும் முறையை தற்போது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள் கடைபிடிப்பதில்லை என்கிறார் சைமன்டெக் ஆய்வுப் பிரிவு தலைவர்.

ஓராண்டிற்கு முன்னர் ரூட்கிட்ஸ் (Rootkits) என்று அழைக்கப்படும் தன்னை மறைத்துக் கொண்டு நம் கணினிகளை அதன் கட்டுப்பாடுக்குள் கொண்டுவரும் வைரஸ் புரோகிராம்களை வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் கண்டுபிடிக்க திணறியது. ஆனால் தற்போது உள்ள அனைத்து வைரஸ் தடுப்பு தயாரிப்புகளுமே இத்தகைய வைரஸ்களை அழித்து விடும் திறனுடையதாக உள்ளது என்று சோஃபோஸ் நிறுவன தொழில்நுட்ப ஆலோசகர் தெரிவித்தார்.சொந்த கணினிகளாயினும், நிறுவனங்களில் உள்ள நெட்வொர்க் பயன்பாட்டு கணினிகளாகட்டும் இரண்டுமே வைரஸ் பாதுகாப்பு விஷயத்தில் அசட்டையாகவே செயல்படுவதாக ஸ்பெயினை சேர்ந்த கணினி பாதுகாப்பு நிறுவனமான் பாண்டா செக்யூரிட்டி ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது.குறிப்பாக கார்ப்பரேட் நெட்வொர்க்குகள் 72 சதவீதம் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.தற்போது இ-மெயில் மூலம் பரவும் வைரஸ்களை விட, வைரஸ் தாக்கிய ஒரு இணையதளத்திற்கு நாம் செல்லும்போது அதிலிருந்து தானாகவே நம் கணினிக்குள் வைரஸ்கள் புகுந்து விடுவதுதான் அதிகமாக ஏற்படுகிறது. நாளொன்றுக்கு வைரஸ் தாக்கிய ஒரு 29,000 இணையப்பக்கங்களை பார்த்து வருவதாக சோஃபோஸ் நிறுவனம கூறுகிறது.
ஸ்பெயினைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் கூறும் இன்னொரு தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 7- 8 ஆண்டுகளுக்கு முன் 1 லட்சம் முதல் 3 லட்சம் கணினி வைரஸ்கள்தான் இருந்தன. இப்போது அது மேலும் பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 90 சதவீத வைரஸ்கள் தங்களது அடையாளங்களை மாற்றியவண்ணம் உள்ளன. இதனால் கண்டுபிடிப்பது ஏறக்குறைய முடியாத காரியமாகிவிடுகிறது என்று அச்சுறுத்துகிறது இந்த ஆய்வு நிறுவனம்.இன்றைய அதி தீவிர கணினி வைரஸ்கள் கொடுக்கும் மற்றொரு அதிர்ச்சி என்னவெனில் நம் கணினியில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து செயல்பட்டு வரும் வைரஸ் எத்தனை நாட்களுக்கு இருக்கிறதோ அது திருட்டு வேலைகளை செய்யத் துவங்கிவிடும். கடன் அட்டை விவரங்கள், நம் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடுதல் போன்ற கிரிமினல் நடவடிக்கைகள் நமக்கு தெரியாமலேயே நடைபெறும்.நியுசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் இதுபற்றி கூறும்போது, "நல்ல திறன் படைத்த வைரஸ் புரோகிராம்களை உருவாக்கும் ஒரு நிபுணர் ஆண்டொன்றிற்கு 2 லட்சம் டாலர்கள் வருவாய் ஈட்டுகிறார்" என்றார்.கொலம்பிய பல்கலைக் கழக கணினி விஞ்ஞான பேராசிரியர் கூறுகையில், "என்னதான் மண்டையைப் பிய்த்துக் கொண்டு கணினி நிபுணர்கள் வைரசுடன் தங்களது போரைத் துவங்கினாலும், வைரஸ் புரோகிராமர்களுக்கு ஏகப்பட்ட நேரம் உள்ளது. அவர்கள் வைரஸ்களை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு புரோகிராம்களை தயாரிப்பதில் அதிக ஊக்கம் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு இதற்கான சக்தி இருக்கிறது" என்று கூறினார்.உலகமயமாக்கலில் கண்னி மயமாதல் அசுர வளர்ச்சி பெற்றுவரும் இன்றைய யுகத்தில் அதற்கு எதிர் முரணாக இதுபோன்ற கிரிமினல் சக்திகளும் வளர்ந்து வருவதை தடுக்க பல்வேறு விதத்தில் ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கிறது.

9/21/07

செல்பேசிகளால் உடல்நலத்திற்கு கேடில்லை

செல்பேசிகளில் அதிக நேரம் பேசினால் மூளைப் புற்றுநோய் ஆபத்து ஏற்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் செல்பேசிகளால் ஏற்படுகிறது என்று எச்சரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் மொபைல் டெலிகம்யூனிகேஷன்ஸ் அன்ட் ஹெல்த் ரிசர்ச் புரோகிராம் மேற்கொண்ட ஆய்வில் செல்பேசி உபயோகத்திற்கும் மூளை புற்றுநோய்க்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளது.
இது தவிர செல்பேசிகளின் சிக்னல்கள் மூளை செயல்பாட்டை பாதிக்கும் என்ற செய்தியையும் இந்த ஆய்வு மறுத்துள்ளது. இருப்பினும் நீண்ட நாட்களுக்கு செல்பேசிகளை உபயோகிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்குமா என்ற கேள்விக்கு இந்த ஆய்வு பதில் அளிக்கவில்லை.
ஏனெனில் இந்த ஆய்வில் ஒரு 10 ஆண்டுகளுக்கு செல்பேசிகளை உபயோகித்து வரும் பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். எனவே பல ஆண்டுகள் செல்பேசிகளை பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து பல சீரிய ஆய்வுகள் தேவை என்று இந்த ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.
குழந்தைப் பருவ புற்றுநோய், மூளைப் புற்றுநோய், ரத்த அழுத்தம், மற்றும் மூளையின் பொதுவான செயல்பாடு ஆகியவற்றில் செல்பேசிகளின் பங்களிப்பு என்ன என்பதை ஆய்வு செய்ய 28 தனியான ஆய்வுகளை இந்த ஆய்வு மையம் மேற்கொண்டது.
சமீபத்தில் இஸ்ரேலின் வீஸ்மான் விஞ்ஞான கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் செல்பேசியில் இருந்து உருவாகும் மிகக் குறைந்த அளவிலான கதிர்வீச்சு மூளையில் இயற்கையாக ஏற்படும் திசுப்பிளவை தடுக்கின்றது என்றும், இதனால் டியூமர் அல்லது கட்டி என்று அழைக்கப்படும் புற்று நோய்க்கு அடிப்படையான விவகாரம் ஒன்று மூளையில் ஏற்படலாம் என்றும் தெரிவித்திருந்தது.

9/18/07

ஆரக்கிள் நிறுவனத்தின் சர்வதேச போட்டி

ஆரக்கிள் கல்வி பவுண்டேஷன் (ஓஈஎஃப்) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் `திங் குவெஸ்ட் இண்டர்நேஷனல் 2008' போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
9 வயது முதல் 19 வயது வரையிலான மாணவர்களும், அவர்களின் பயிற்சியாளர்கள், ஆசிரியர்களும் இந்த போட்டியில் குழுவாகப் பங்கேற்று, கல்வி தொடர்பான இணைய தளத்தை உருவாக்கலாம் என்று ஆரக்கிள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
அவர்கள் தங்களின் இணைய தளத்தை 21ம் நூற்றாண்டில் திறமைகளுடன் குழுத்திறனாக சிற்பான எண்ண்ங்களுடனும், தாமாகவே முன்வந்து பிரச்சினைகளை தீர்க்கும் தொழில்நுட்ப திறமைகளை மேம்படுத்தலாம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
திங் குவெஸ்ட் என்பது ஒரு பிரத்யேக கல்வித் திட்டமாகவும், மாணவர்களை தொழில்நுட்ப ரீதியில் ஓருங்கிணைத்து அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் நடத்தப்படுவதாகவும் ஆரக்கிள் உயர் அதிகாரி கிளாரே டோலன் தெரிவித்துள்ளார்.

9/17/07

Super 8 :மூன்றாவது supper 8 சுற்றுப்போட்டியில் தென்ஆப்ரிக்கா இங்கிலாந்தை வென்றது.

Twenty 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற மூன்றாவது Super 8 சுற்றுப்போட்டியில் தென்ஆப்ரிக்கா 19 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.
முதலில் களமிறங்கிய தென்ஆப்ரிக்க அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்தது.
அந்த அணியின் மோர்கெல் 43 ரன்னும், பவுச்சர் 29 ரன்னும், கெம்ப் 21 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் பிராட் 3 விக்கெட்டும், பிளின்டாப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
வெற்றி பெற 155 ரன் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன் மட்டுமே எடுத்தது.
அந்த அணியின் பிரியார் 32 ரன்னும், ஷா 36 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து தென் ஆப்ரிக்கா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

9/16/07

உங்களுடன் பழக ஒரு ரோபோ

உங்கள் முகத்தை அடையாளம் கண்டு உங்கள் பெயரை தெரிந்து கொண்டு உங்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் சிறிய ரோபோவை டெக்சாசில் உள்ள ரோபோ தயாரிப்பு நிறுவனமான ஹேன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புரோகிராமர்கள் ஆகியோர் கடுமையாக உழைத்து தயாரித்துள்ளனர்.
இந்த ரோபோவிற்கு பேசவோ, நடக்கவோ தெரியாது. ஆனால் கண் சிமிட்டல் உள்ளிட்ட பல்வேறு வெளிப்பாடுகள் மூலம் நம்முடன் இந்த ரோபோ தொடர்புகொள்ளுமாம். 17 அங்குலம் உயரம் மற்றும் 6 பவுண்ட் எடையுள்ள இந்த செயற்கை ஜினோ 5 ஆண்டுகால உழைப்பினால் விளைந்த கண்டுபிடிப்பாகும்.
நம் கூடவே ஒட்டி உறவாடி வாழ முடிந்த இத்தகைய ரோபோக்களுக்கு தேவை அதிகமிருப்பதாக டேவிட் ஹேன்சன் கூறுகிறார்.
தற்போது உருவாக்கிய இந்த ரோபோச்சிறுவனை (ஆம்!அப்படித்தான் அழைக்கிறார்கள்!) லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் ஒயர்டு நெக்ஸ்ட்ஃபெஸ்ட் டெக்னாலஜி மாநாட்டில் மாணவர்களுக்கு காட்சிப் பொருளாக்க உள்ளார்கள்.
நிறைய ரோபோ பொம்மைகள் பல்வேறு தொழில்நுட்ப உள்ளடக்கத்துடன் இருந்தாலும், இந்த ரோபோச்சிறுவன் ஜினோ உங்களுடன் சேர்ந்து கற்றுக் கொள்ளும் திறனும், உங்களுடன் உரையாடும் திறனும் ஏன் தனது முகத்தில் சில அசைவுகளைச் செய்து தன் உணர்வையும் வெளிப்படுத்தும் திறனும் உடையது என்கிறார் டேவிட் ஹேன்சன்.
இது ஏதோ விஞ்ஞானப் புனை கதை போல் தோன்றுகிறது இல்லையா? ப்ரெய்ன் ஆல்டிஸ் என்பவரின் "சூப்பர் டாய்ஸ் லாஸ்ட் ஆல் சம்மர் லாங்" என்ற நூலைப் படித்த டேவிட் ஹேன்சன், அதனால் தூண்டப்பட்டே இத்தகைய ரோபோவை வடிவமைப்பதில் தீவிரம் காட்டியதாக தெரிவித்தார்.

9/14/07

ஸ்டாம்வோர்ம்-Virus

வலையுலகம் வாழ்வின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. மின்னஞ்சல் என்பது தொடர்பு சாதனங்களில் மற்ற எந்த வடிவங்களையும் விட அத்தியாவசியமான ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால் பாதுகாப்பு என்ற ஒரு விவகாரம் மட்டும் இன்னமும் அதன் உச்சத்தை எட்டவில்லை.

ஆம்! மோசடி மற்றும் வைரஸ் பரப்பும் இணையதளங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. 28 மின்னஞ்சல்களுக்கு ஒரு மின்னஞ்சல் என்ற விகிதத்தில் வைரஸ்கள் தாக்குகின்றன என்று மெசேஜ் செக்யூரிட்டி சேவை வழங்கும் நிறுவனமான மெசேஜ் லாப்ஸின் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஸ்டாம்வோர்ம் என்ற புதிய வைரஸ், இணைய தபால் அட்டை மற்றும் யூ டியூப் வீடியோக்களை தனது தாக்குதல் ஊடகமாக பயன்படுத்துகிறது. இந்த ஸ்டார்ம்வோர்ம் வைரஸ் உலகம் முழுதும் 18 லட்சம் கணினிகளை தாக்கியுள்ளது.

மோசடி சமிக்ஞைகளை உள்ளடக்கிய இணைப்புகளுடன் வரும் இ-மெயில்கள் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 19.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஜூலை மாதத்தில் 0.5 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாடியோவ் .... கவனமாக இருங்கள்.

9/12/07

சில்வர்லைட் 1.0 - Microsoft அறிமுகம்

இணையதள இன்டர்ஃபேஸ் பயன்பாடுகளின் அடுத்த கட்ட அறிமுகமாக சில்வர்லைட் என்ற பயன்பாட்டை Microsoft அறிமுகம் செய்துள்ளது.

மல்ட்டி மீடியா பயன்பாடுகளுக்கு உகந்த இந்த சில்வர்லைட் அடுத்த மே மாதத்திற்குள் 200 மில்லியன் நிர்மாணங்களை எட்டிவிடும் என்று Microsoft நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வெப் இன்டர்ஃபேஸ் டிசைனில் அடோப் பிளாஷுடன் சில்வர்லைட் கடும் போட்டிக்கு தயாராகி வருகிறது. இது குறிப்பாக ஆடியோ மற்றும் வீடியோவில் அதிக கவனம் செலுத்துகிறது என்று Microsoft ன் மென்பொருள் பிரிவின் தலைமை வடிவமைப்பாளர் ரே ஒஸ்ஸி தெரிவித்துள்ளார்.

ஆனால் எதிர்காலத்தில் டாட் நெட்டில் இணையத்திற்காக புரோகிராம்களை உருவாக்க இது உதவும் என்று அவர் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.

பயனாளர்களின் நோக்கத்திற்கேற்ப இது பிளாஷ் போலவே செயல்படுகிறது. இந்த பிளக்-இன் அப்ளிகேஷனை ஒருவர் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

இது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஃபயர் ஃபாக்ஸ் மற்றும் சஃபாரி ஆகிய பிரவுசர்களில் கிடைக்கும். டவுன்லோடு செய்த பிறகு ஒரு சிலவர்லைட் பயன்பாடு உள்ளடங்கிய இணையப் பக்கத்தை திறந்து கொள்ளலாம்.

உதாரணமாக டஃபிடி (Taffiti) என்ற பரிசோதனை தேடல் இன்டர்ஃபேஸ் (Search Interface) திறக்கும். இந்த டஃபிடி இன்டர்ஃபேஸ் மரம் போன்ற வரைபடம் திரையில் தோன்றும். இது திறனுள்ள ஒரு பணியிடத்தை நமக்கு அளிக்கும்.
ஆனால் சில்வர்லைட்டை நுகர்வோர்களிடம் சேர்ப்பிக்க விண்டோஸ் அப்டேட்டை பயன்படுத்த மாட்டோம் என்று microsoft கூறியுள்ளது. மாறாக உள்ளடக்க அல்லது பொருளடக்கம் வழங்குவோர் மற்றும் Microsoft .com பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளது.


மேஜர் லீக் பேஸ்பால் மற்றும் ஃபாக்ஸ் மூவிஸ் ஆகியவை சில்வர்லைட் பயன்பாட்டை உபயோகப்படுத்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் என்டர்டெய்ன்மென்ட் டுனைட், தி ஹோம் ஷாப்பிங் நெட்வொர்க், வேட்ல்ட் வைடு ரெஸ்லிங் என்டர்டெய்ன்மென்ட் (WWE), மற்றும் வீடியோ பகிர்வு இணையதளமான பிரேக் டாட் காம் ஆகியவற்றை சில்வர்லைட் பொருளடக்க வழங்குவோருக்காக சேர்த்துள்ளதாய் Microsoft அறிவித்துள்ளது.

என்டர்டெய்ன்மென்ட் டுனைட், சில்வர்லைட் அடிப்படையிலான இணையதளங்களை உருவாக்கி, எம்மி விருதுகள் (Emmy Awards) மற்றும் பிற நிகழ்வுகளை முக்கிய அம்சங்களாக்கவுள்ளது.சில்வர்லைட் உதவியுடன் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் லைவ் அப்ளிகேஷன்கள் பலவற்றை பயனாளர்கள் சிறந்த முறையில் பயன்படுத்த மேம்படுத்தவுள்ளதாக Microsoft தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் சில்வர்லைட் உள்ள சிறந்த தேடல் சாதனத்தை (Search Tool) அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த புதனன்று சில்வர்லைட் 1.0 வுடன் சில்வர்லைட் என்கோடிங் மற்றும் பப்லிஷிங் டூல் பயன்பாடு ஒன்றையும் சேர்த்து அறிமுகப்படுத்தியுள்ளது. இது எக்ஸ்ப்ரஷன் என்கோடர் 1.0 என்று அழைக்கப்படுகிறது.